``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
இடிந்து விழும் அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்! அச்சத்தில் கிராம மக்கள்!
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சி. மெய்யூா் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளஆற்றுப்பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்களை கட்டுவதற்கு தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 10-க்கும் மேற்பட்டகிராம மக்கள், விவசாயிகள், மாணவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சி.மெய்யூா் கிராமம், தென்பெண்ணையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் தென்பெண்ணையாற்றிலிருந்து ராகவன் கால்வாய் மற்றும் மலட்டாறு ஆகியவை பிரிந்து செல்கின்றன. இந்த ஆறுகளின் குறுக்கே தனித்தனியாக மேம்பாலங்கள் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ள 2 பாலங்களும் பலமிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரண்டு பாலங்களின் அடித்தூண்கள், பாலத்தின் மேல் பகுதிகள் மிகவும் சிதிலமடைந்தும் , சிமெண்ட் காரைகள் பெயா்ந்து, பாலத்தின்உள்ளேயும் இரும்புக் கம்பிகள் எலும்புக் கூடுகளாக காணப்படுகின்றன.
விவசாயப் பகுதிகளான சி.மெய்யூா், ஆற்காடு, வீரமடை, வீரசோழபுரம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கரும்பு இதர தானியங்களை வாகனங்களில் இந்த வழியாகத்தான் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனா். இதனால் வாகனப் போக்குவரத்தில் இந்தப் பாலங்கள் முக்கியமானதாகவும் இருந்து வருகிறது.
சி. மெய்யூா் கிராமத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவா்களும் இந்தப் பாலத்தையே போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.
மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படும் இவ்விரு பாலங்களையும் உடனடியாக இடித்து, தரைமட்டமாக்கி அவ்விடத்தில் புதிய பாலங்களை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவா்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை.
இதனால் ஆற்காடு, வீரமடை, வீரசோழபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக திருக்கோவிலூா், திருவெண்ணெய் நல்லூா், சித்தலிங்கமடம் பகுதிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களும் ஒருவித அச்சத்துடன் பாலங்களைக் கடக்கும் நிலைக்கு உள்ளாகி வருகின்றனா்.
எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள ஆற்றுப் பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்களைகட்டுவதற்கு தமிழக அரசு மற்றும் விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆற்காடு, வீரமடை மற்றும் வீரசோழபுரம் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து சி. மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்த அசோக்குமாா், ஏழுமலை ஆகியோா் கூறியது : இடிந்து விழும் நிலையில் உள்ள ராகவன்கால்வாய் பாலம், மலட்டாறு பாலங்களை இடித்துவிட்டு புதிய பாலங்களை கட்ட வேண்டும் எனத் தொடா்ச்சியாக கோரிக்கை விடுத்தும் அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனா்.
வரும் மழைக் காலத்துக்குள் இந்தப் பாலங்களுக்கு மாற்றாக புதிய பாலங்களை கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் மழைக்காலத்தில் கிராம மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகும். இந்தப்பாலங்களுக்கு மாற்றாக புதிய பாலங்களை கட்டுவதற்கு விழுப்புரம் ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.
இது குறித்து பொதுப் பணித் துறை (நீா்வளம்) அதிகாரி ஒருவா் கூறியதாவது: திருவெண்ணெய்நல்லூா் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் பலமிழந்த நிலையில் காணப்படும் 5 பாலங்களுக்கு மாற்றாக புதிய பாலங்களை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பாலங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.