இதயம் தொடரில் இருந்து விலகிய பாரதி கண்ணம்மா நடிகை!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து நடிகை ஃபரீனா ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு பதிலாக நடிகை சுபலட்சுமி ரங்கன் நடிக்கவுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த இந்தத் தொடரில் ஜனனி அசோக் குமார் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக ரிச்சர்ட் ஜோஷ் நடித்தார்.
தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனனி அசோக் குமார் இதயம் தொடரில் இருந்து விலகியதால், அத்தொடரை முடித்துவிட்டு, இதயம் -2 பாகத்தை எடுத்து வந்தனர். இதில் ஜனனி அசோக் குமாருக்கு பதிலாக பல்லவி என்பவர் நாயகியாக நடித்து வந்தார்.
இத்தொடரின் கூடுதல் பலமாக வில்லி பாத்திரத்தில் நடித்து வந்த ஃபரீனா இருந்தார். எதிர்மறையான இவரின் பாத்திரம் இதயம் தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவருக்காக தொடரைப் பார்ப்பவர்களும் இருந்து வந்தனர்.

இந்நிலையில், இதயம் - 2 தொடரில் இருந்து விலகுவதாக நடிகை ஃபரீனா தெரிவித்துள்ளார். இவரின் இந்த திடீர் முடிவு, அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
தொடரில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பலரும் ஃபரீனாவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், ஃபரீனாவுக்கு பதிலாக இந்த பாத்திரத்தில் நடிகை சுபலட்சுமி ரங்கன் நடிக்கவுள்ளார்.
இதையும் படிக்க | மகாநதி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் விலகல்!
Actress Farina Azad has quits from the series Idhayam, which is being aired on Zee Tamil.