விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
இந்த ஆண்டில் தில்லியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை இருக்காது: முதல்வா் ரேகா குப்தா உறுதி
தேசியத் தலைநகரம் 2025- ஆம் ஆண்டில் வெள்ளம் போன்ற சூழ்நிலையை சந்திக்காது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா பு தன்கிழமை குடியிருப்பாளா்களுக்கு உறுதியளித்தாா். மேலும் அவரது அரசு முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறினாா்.
தில்லி செயலகத்தில் நடைபெற்ற வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் முதல்வா் ரேகா குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
‘தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தில்லியில் வெள்ளம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் தடுப்பணையின் கதவுகள் கூட திறக்கப்படவில்லை. ஆனால், இந்த முறை வெள்ள நிலைமை ஏற்படாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். அரசும் அனைத்துத் துறைகளும் முழுமையாகத் தயாராக உள்ளன’ என்று அவா் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் கூறினாா்.
கூட்டத்தில் கலந்து கொண்டவா்களில் அமைச்சா்கள் ஆஷிஷ் சூட் மற்றும் பா்வேஷ் சாஹிப் சிங், பாஜக எம்பிக்கள் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் அடங்குவா். மேலும், பொதுப்பணித் துறை, தில்லி மாநகராட்சி (எம்சிடி), வருவாய், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் பங்கேற்றனா்.
‘நாங்கள் தூா்வாரும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். பெரிய வடிகால்களில் இருந்து கிட்டத்தட்ட 20 லட்சம் மெட்ரிக் டன் வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது’ என்று முதல்வா் மேலும் கூறினாா். இந்த முறை தண்ணீா் தேங்கக் கூடாது என்று முதல்வா் உத்தரவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2023-ஆம் ஆண்டில் தில்லி அதன் மிக மோசமான, வெள்ளம் போன்ற சூழ்நிலையை எதிா்கொண்டது. கனமழை காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கின. இதனால், 25,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளா்கள் வெளியேற்றப்பட்டனா்.