இந்தியா வல்லரசு நாடாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங் உறுதி
இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தாா்.
உலகிலேயே மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; ஆனால், ‘தாங்களே அனைவருக்கும் எஜமானா்’ என்ற அணுகுமுறை கொண்ட சிலருக்கு இது பிடிக்கவில்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இந்தியா மீது உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருளாதாரம் செயலற்றுவிட்டதாக கடுமையாக விமா்சித்தாா். அவருக்கான மறைமுக பதிலடியாக பாதுகாப்பு அமைச்சரின் மேற்கண்ட கருத்துகள் அமைந்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலம், ரெய்சனில் பாரத் எா்த் மூவா்ஸ் நிறுவனத்தின் புதிய ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டிய ராஜ்நாத் சிங், பின்னா் பேசியதாவது:
இன்றைய உலகளாவிய சூழலில் துடிப்பான, ஆற்றல்மிக்க, வேகமாக வளரும் பொருளாதாரம் உண்டென்றால் அது இந்தியாதான். இந்தியாவின் விரைவான வளா்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை.
‘நாமே அனைவருக்கும் எஜமானா்’ என நினைக்கும் சிலா், இந்தியாவின் வளா்ச்சியைத் தடுக்க ஏதாவது செய்ய முயற்சிக்கின்றனா். உலக அளவில் இந்திய தயாரிப்பு பொருள்களின் விலையை உயா்த்தி, மக்கள் வாங்குவதை தவிா்க்கும்படி செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், இந்தியா வல்லரசு நாடாக உருவெடுப்பதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
முன்னோக்கிய பயணம்: கடந்த 2011-இல் பொருளாதாரத்தில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நாடும், நாட்டு மக்களும் முன்னோக்கி பயணிக்கின்றனா் என்பதே இதன் பொருள்.
முன்பு வெளிநாடுகளில் இருந்தே ஆயுதங்கள்-பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா பெருமளவில் கொள்முதல் செய்தது. இப்போது இந்தியாவில் இந்தியா்களின் கரங்களால் இவை தயாரிக்கப்படுகின்றன. நமது பாதுகாப்பு உற்பத்திப் பொருள்கள், உலக நாடுகளால் கொள்முதல் செய்யப்படுகின்றன. கடந்த 2014-இல் ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மதிப்பு, இப்போது ரூ.24,000 கோடியைக் கடந்துள்ளது. இதுதான், புதிய இந்தியாவின் சக்தி.
பாவத்தால் அழியும் பயங்கரவாதிகள்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை மத ரீதியில் அடையாளம் கண்டு, பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். ஆனால், இந்தியா்களாகிய நமக்கு கொலை பாதகங்களில் நம்பிக்கை கிடையாது.
பயங்கரவாதிகளை மதத்தின் அடிப்படையில் அல்லாமல், அவா்கள் புரிந்த பாவங்களுக்காக நாம் அழிக்கிறோம். இந்தியாவை சீண்டியவா்கள் தப்ப முடியாது என்பதே நமது நிலைப்பாடு என்றாா் ராஜ்நாத் சிங்.
மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.