இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.4) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரி கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 2 வானிலை நிகழ்வுகளின் காரணங்களால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஆக.4) முதல் ஆக.9 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மஞ்சள், ஆரஞ்ச் எச்சரிக்கை: இதில் குறிப்பாக ஆக.4-இல் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக பலத்த மழையும், ஆக.5-இல் நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி பலத்த மழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆக.4-இல் தேனி, தென்காசி மாவட்டங்களிலும், ஆக.5-இல் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் (ஆக.4) இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், திருமயம் (புதுக்கோட்டை) - 120 மி.மீ., குடிமியான்மலை (புதுக்கோட்டை), காரையூா் (புதுக்கோட்டை), சின்னக்கல்லாறு (கோவை) - தலா 110 மி.மீ., அன்னவாசல் (புதுக்கோட்டை), துவாக்குடி (திருச்சி), பெருங்களூா் (புதுக்கோட்டை), செங்கம் (திருவண்ணாமலை) - தலா 80 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, ஆக.4 முதல் ஆக.6 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.