வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
இரண்டு முறை துரத்திய தெரு நாய்கள்! - திக் திக் அனுபவம் பகிரும் இளைஞர் | #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தெரு நாய்கள்களால் நான் இரண்டு தடவை பாதிக்கப்பட்டிருக்கிறேன்..
ஒரு முறை இரவு நேரம், வெளியூரிலிருந்து வந்த போது பஸ் ஸ்டாண்டில் விட்டு வைத்திருந்த என்னுடைய யமஹா பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒரு தெருவில் படுத்திருந்த இரண்டு நாய்கள் திடீரென பைக்கின் இரண்டு பக்கமுமாக துரத்த நான் என் கால்களிரண்டையும் சர்க்கஸில் வருவது போல பம்பருக்கு மேல் தூக்கி உயர்த்திக்கொண்டே ஆக்ஸிலேட்டரை ரைஸ் பண்ணிக்கொண்டே வந்து விட்டேன்..
அந்த தெரு முனை வரை வேகமாக துரத்தி வந்த அவை பின் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் சட்டென நின்று விட்டன..

இன்னொரு முறை இதே போல் இரண்டாம் பணி முடித்து இரவு 10.30 மணிக்கு கைனடிக் ஹோண்டா பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென நாலைந்து தெரு நாய்கள் துரத்த ஆரம்பித்தன... வேகமாக வர எண்ணி ஆக்ஸிலேட்டரை திருகினேன்... என்ன காரணமோ வண்டி நின்று போய்விட்டது.. "நாய் துரத்தினால் ஓடாமல் நின்று அவற்றை முறைத்து பார்த்தால் அவை ஒன்றும் செய்யாது " என புத்தகத்தில் படித்த ஞாபகம் வந்து வண்டியை கீழே சாய்த்து விட்டு அப்படியே செய்தேன்...
அதெல்லாம் 'ஏட்டு சுரைக்காய்' என ஒரு நாய் நிரூபித்தது.. அது சட்டென என் வலது கெண்டைக்காலை கவ்வி விட்டது, பேண்ட் அணிந்திருந்தாலும் அது கடித்த இணத்தில் சுர்ரென்று வலி தெரிந்தது.. நல்ல வேளை என் பின்னே வந்து கொண்டிருந்த இரு பைக் காரர்கள் என்னருகே நின்று நாய்களை துரத்தி மேற்கொண்டு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் என்னை காப்பாற்றினர்..
உடனே நான் வீட்டுக்கு கூட போகாமல் என் நண்பர் ஒருவரை போனில் பேசி வரவழைத்து நேரே பொது மருத்துவமனை சென்று முதலில் காயத்துக்கு மருந்து போட்டு டிடி இன்ஜெக்ஷனும் போட்டுக்கொண்டேன்..
மருத்துவர், முதலில் மாதிரி தொப்புளை சுத்தியெல்லாம் ஊசி போட தேவையில்லை, நீங்கள் நாளை காலையிலிருந்து ஒன்று விட்டு ஒரு நாள் ஏழு ஊசிகள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்" என சொல்லி ரேஷன் கார்டு போல் ஒரு கார்டையும் கையில் கொடுத்து என் தொப்புளில் சாரி... வயிற்றில் பாலை வார்த்தார்... அப்புறம் அந்த கார்டை வைத்துக்கொண்டு அந்த ஒரு வார கோர்ஸை முடித்தேன்..

அந்த நிகழ்ச்சியிலிருந்து இரவு நேரங்களில் பணிக்கு பைக்கில் செல்வதை விட்டு காரிலேயேதான் செல்வேன்..
இப்போது கூட முன் இரவு நேரங்களில் எங்காவது பைக்கில் போவதென்றால் ஒரு வித கிலிதான்... போகும் வழியில் தெரு நாய்களை பார்த்தால் வேறு தெரு வழியாக சுற்றித்தான் செல்வேன்..
இந்த பிரச்சினைக்கு எனக்கு தெரிந்த தீர்வு:
முன்பு கார்ப்பரேஷனில் தெரு நாய்களை நாய் வண்டியில் பிடித்து சென்று அடைத்து வைத்து கொன்றனர்..
பின் ப்ளூகிராஸ் தலையீட்டால் எதுவும் செய்வதில்லை... அப்புறம் சில காலம் நாய்களை பிடித்து கொண்டு போய் அவற்றிற்கு கருத்தடை ஆபரேஷன் செய்து பின் எந்த ஏரியாவில் பிடித்தார்களோ அங்கேயே கொண்டு விட்டு விடுவார்கள்... அதனால் கூட நாய்களின் பெருக்கத்தை கட்டு படுத்த முடியவில்லை..
முதலில் தெரு நாய்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் பொதுவாக உணவை அளிக்கக்கூடாது.. வேண்டுமானால் அந்த நாய்களை அவரவர் அவர்கள் வீட்டில் வைத்து வளர்க்கட்டும்... அப்படி செய்தால் இன்னார் வீட்டு நாய் என தெரியும், அவர்களும் ஊசி போட்டு பராமரிப்பார்கள்..
பொதுவாய் "தெரு நாய்கள் நம் வீட்டுப் பகுதிகளில் நிறைய இருந்தால் திருடன் வரமாட்டான், நமக்கு பாதுகாப்பு " என மக்கள் நினைப்பதை விட வேண்டும்.. அதேபோல் பொதுவில் சிலர் நிறைய பிஸ்கட்களை புண்ணியம் என்ற பெயரில் ஆங்காங்கு தம் வண்டியில் போய் தெரு நாய்களுக்கு வைப்பதை தவிர்க்க வேண்டும்..
சிக்கன், மட்டன், மீன் கடைக்காரர்கள் தங்கள் கடை மீதங்களை பொது இடங்களில் யாருக்கும் தெரியாமல் கொண்டு போடுவதை தவிர்க்கவேண்டும்...
அது போல் ப்ளூ கிராஸ் அன்பர்களும் தெரு நாய்கள் எங்கெங்கு நிறைய இருக்கிறது என அவர்கள் அமைப்பின் மூலம் தெரிந்து அரசுக்கு ஒத்துழைத்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்..
அரசு அதிகாரிகளும் விலங்கு மருத்துவர்களும் இணைந்து தெரு நாய்களுக்கு அந்தந்த பகுதி மக்களின் உதவியுடன் நாய்களுக்கு தீங்கு வராமல் உணவுகள் மூலம் மயக்கமருந்து கலந்து தந்து அவற்றை பிடித்து கொண்டு போய் கருத்தடை ஆபரேஷன் செய்து அவைகளின் உடலில் ஏதாவது அடையாளம் செய்து விட்டு பின் ஏற்கனவே பிடித்த இடங்களிலேயே அவற்றை விட்டு விட வேண்டும்...
இதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும், பொது மக்களும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் 'மார்க்' இல்லாத நாய்களை பார்த்தால் நகராட்சிக்கு செய்தி சொல்ல வேண்டும். இவற்றை எல்லாம் கடை பிடித்தால் கண்டிப்பாக நாய்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்... விலங்கு ஆர்வலர்களின் எண்ணத்தையும் பூர்த்தி செய்யலாம்...
மொத்தத்தில் நாய் நன்றியுள்ளதுதான், அதை காட்ட அது சாதாரணமாக வாலை ஆட்டுவது ஓகேதான்... ஆனால் நம் உடல்நலம் சார்ந்த இயல்பு வாழ்வில், அவை வாலை ஆட்ட நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது..
-தேன்ராஜா , நெய்வேலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!