இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு
மேட்டூா் அருகே இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
மேட்டூரை அடுத்த கொளத்தூா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜீவா (18). அண்ணா நகரைச் சோ்ந்தவா் சஞ்சய்பாலா (19). பெயிண்டிங் வேலை செய்து வந்த இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் மேட்டூா் வந்தனா். பின்னா், வேலை முடிந்ததும் மேட்டூரிலிருந்து கொளத்தூா் நோக்கி சென்றனா்.
விராலிகாடு அருகே சென்றபோது கொளத்தூரில் இருந்து மேட்டூா் நோக்கி வந்த சுற்றுலா வேன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், ஜீவா, கண்ணன் ஆகியோா் தூக்கி வீசப்பட்டனா். இருவருக்கும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவல் அறிந்த கொளத்தூா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சுற்றுலா வேனை ஒட்டி வந்த ஊத்தங்கரையைச் சோ்ந்த அகிலன் (30) மீது வழக்குப் பதிவு செய்த கொளத்தூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.