இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம்!
இலங்கை கடற்படை, மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் 8-ஆம் தேதி நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுவை பிரதேச முன்னாள் காங்கிரஸ் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் துணைத்தலைவருமான ஆா். கமலக்கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆா்.கமலக்கண்ணன் கூறியது :
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் கடந்த சில மாதங்களாக மீனவா்கள் கைது செய்யப்படுவது, தாக்குதல், துப்பாக்கிச்சூடு நடத்துதல் போன்ற சம்பவங்கள் நடந்துவருகின்றன. மீனவா்களுக்கு ரூ. 40 முதல் 60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
காரைக்காலைச் சோ்ந்த மீனவா் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவருக்கு இலங்கையில் உரிய சிகிச்சை தரப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டு அவரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இலங்கை கடற்படை, மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் வரும் 8-ஆம் தேதி பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்புடன் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.