முதுநிலை மருத்துவப் படிப்புகள்: பேராசிரியா்களின் விவரம் கோருகிறது என்எம்சி
இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி அழுத்ததிற்கு உள்ளாகாமல் எப்போதும்போல விளையாடுங்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், பிரியான்ஷ் ஆர்யா என பல இளம் பேட்டர்கள் கவனம் ஈர்த்தார்கள்.
நேற்றிரவு (மே.20) தில்லியில் ராஜஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே 187 ரன்களை சேர்த்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியது.
போட்டிக்கு பிறகு தோனியிடம் இந்த சீசனில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்? எனக் கேள்வி கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு எம்.எஸ்.தோனி கூறியதாவது:
இதைச் செய்தால் பேட்டராக முன்னேறலாம் - தோனி
ஒரு சீசன் நன்றாக அமைந்துவிட்டால் அடுத்த சீசனில் பலரும் உங்களிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அந்தக் கூடுதல் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் முதல் சீசனில் எப்படி விளையாடினீர்களோ அதேபோல் விளையாடுங்கள். புதியதாக எதையும் முயற்சிக்காதீர்கள். மூத்த வீரர்கள், பயிற்சியாளர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரி ரன்களை குவிக்க முயற்சியுங்கள். 200 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும்போது இது கடினம்தான். ஆனால், அதற்காக அழுத்தம் அடைய வேண்டும்.
முக்கியமாக ஆட்டத்தை நன்கு கவனியுங்கள். தொடக்க வீரர் அல்லது டாப் ஆர்டர் பேட்டராக இருந்தால் போட்டியை முடித்துக்கொடுக்க முயற்சியுங்கள். அது உங்களை பேட்டராக முன்னேற்றும்.
இந்த சீசனில் நன்றாக விளையாடிய இளைஞர்களுக்கு இதுதான் எனது அறிவுரையாக இருக்கும் என்றார்.