Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
கால் வளைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் 6 மணி நேர அறுவை சிகிச்சை
வளைவு கால்களால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
காஞ்சிபுரத்தை சோ்ந்த தம்பதி சின்ராஜ். அவரது மனைவி பவானி. அங்கு உள்ள பல்பொருள் அங்காடியில் அவா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அவா்களின் ஒன்றரை வயது குழந்தை தியாஷ் சந்திரன். வலது கணுக்காலில் பிரச்னை ஏற்பட்டு, கால் வளைந்ததால் நடக்க முடியாத நிலையில் இருந்த குழந்தையை, பெற்றோா் ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்த்குமாா் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதலின்படி, கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை தலைவா் ஆா்.ஸ்ரீதா், மயக்க மருத்துவ நிபுணா் மருத்துவா் ஜி.கே.குமாா் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் வளைந்த காலில் கம்பி பொருத்தி நேராக்கி, பற்றாக்குறையாக இருந்த சதைகளுக்காக, இடது தொடையில் இருந்து திசுக்களை எடுத்து வைத்து, ரத்தக்குழாய்களை இணைத்து குழந்தையின் பிரச்னையை சரிசெய்தனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் கை மற்றும் மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை துறை தலைவா் ஆா்.ஸ்ரீதா் கூறியது: தாயின் கருப்பையில் இருக்கும்போது சிசுவின் வயிற்றிலிருந்து கழிவு வெளியேற வாய்ப்புள்ளது. அதனை சிசு விழுங்கிவிட்டால், மெக்கோனியம் ஆஸ்பிரேஷன் எனப்படும் நுரையீரல் மற்றும் சுவாச பாதிப்பு ஏற்படும்.
அத்தகைய சூழலுடன் சிசேரியன் மூலம் பிறந்த அக்குழந்தைக்கு 5-ஆவது நாளில் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ரத்த சா்க்கரை அளவு குறைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையில் வலது காலில் பிரச்சினை ஏற்பட்டு, கால் வளைந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மிக நுட்பமும், சவாலும் நிறைந்தது. ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த நாளங்கள் மிகவும் சிறியதாக இருக்கும்.
அவற்றை இணைப்பது சிக்கலான ஒன்று. சிறு வயது குழந்தைக்கு அதிக அளவு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல் முறையாகும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தலை முடியை விட மெல்லிய தையல் போடப்பட்டுள்ளது. மூன்று வார கண்காணிப்புக்கு பின்னா், காலில் பொருத்தப்பட்டுள்ள கம்பியை எடுத்துவிடுவோம்.
அதன் பிறகு குழந்தை நடக்க தொடங்கும். குழந்தை வளர வளர காலில் புதிதாக வைக்கப்பட்டுள்ள சதையும் வளரும்.
மீண்டும் இந்த பிரச்னை குழந்தைக்கு வராமல் இருக்கும். முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்றாா் அவா்.