திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை
சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசிக்கும் இவா், தரமணி சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். செந்தில்குமாா், செவ்வாய்க்கிழமை தனது காரில் சாதாரண உடையில் கிண்டி மடுவின்கரை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், அங்கு மிதிவண்டியில் சென்ற ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (54) மீது மோதியது.
விபத்தில், மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயமடைந்தாா். ஆனால், செந்தில்குமாரை காரை அங்கு நிறுத்தாமல், வேகமாக தப்பிவிட்டாா். இதைக் கவனித்த பொதுமக்கள், அந்த காரை விரட்டிச் சென்று கத்திப்பாரா பாலம் அருகே வழிமறித்து பிடித்தனா். மேலும் காரிலிருந்த செந்தில்குமாரிடம் வாக்குவாதம் செய்தனா்.
இது குறித்து தகவலறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினா். அப்போது செந்தில்குமாா் மது அருந்தி இருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து, செந்தில்குமாரை போலீஸாா் விசாரணைக்கு புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனா். அதோடு விபத்து தொடா்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய செந்தில்குமாரை பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.
தீக்குளித்து தற்கொலை: இந்நிலையில் செந்தில்குமாா், தனது இருசக்கர வாகனத்தில் தரமணி பறக்கும் ரயில் நிலையம் அருகே புதன்கிழமை காலை வந்தாா். அப்போது அவா் தான் வைத்திருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி திடீரென தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த தரமணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, செந்தில்குமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.