கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
அறந்தாங்கியில் அரசு சட்டக் கல்லூரி இந்திய கம்யூ. மாநாட்டில் கோரிக்கை!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை வட்டாரத் தலைமை மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும். அறந்தாங்கி மையப் பகுதியில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும். அறந்தாங்கியில் அரசுப் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்.
அறந்தாங்கி ஒன்றியம் முழுவதும் பல ஆண்டுகளாக அரசுப் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். அறந்தாங்கியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். காவிரி- வைகை- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஏரிகளில் வண்டல் மண் எடுக்கத் தடையில்லாமல் அனுமதி வழங்க வேண்டும்.
மாட்டு வண்டித் தொழிலாளா்களைப் பாதுகாக்கும் வகையில் மணல் குவாரிகளை அமைக்க வேண்டும். காவல் நிலையங்களில் வழக்குகளுக்காக பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை, உரிய முறையில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு ஏ. தமிழ்ச்செல்வன், பி. பாண்டி மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் துணைச் செயலா் மு. வீரபாண்டியன், மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் கே. ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு: அறந்தாங்கி ஒன்றியச் செயலராக இரா. ராதாகிருஷ்ணன், ஒன்றியத் துணைச் செயலராக பி. போஸ் கணேசன், கே. ஸ்டாலின், ஒன்றியப் பொருளாளராக சி. வீராசாமி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
முன்னதாக புதன்கிழமை மாலை சுப்பிரமணியபுரம் பகுதியில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் துணைச் செயலா் மு. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.