இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெற்றது.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது. மாநாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மாநாட்டில் விஜய் நடந்து வருவதற்காக 'ரேம்ப் வாக் மேடை' அமைக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் புடைசூழ விஜய் அதில் நடந்து சென்றபோது தொண்டர்கள் பலரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தடுப்பின் மீது ஏறி விஜய்யை நோக்கிச் சென்றனர்.
அப்போது மேடையின் மீது ஏறிய ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர், குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே வீசினார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சரத்குமார் என்ற இளைஞர், தனது தாயாருடன் நேரில் சென்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் பவுன்சர்கள் 10 பேர் மீது புகாரளித்துள்ளார்.