இவரது அர்ப்பணிப்பை யாராலும் ஈடுசெய்ய முடியாது; யாரைக் கூறுகிறார் லுங்கி இங்கிடி?
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளருக்கு அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 11) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியம்: ஆஸி. வீரர்
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தொடர்ச்சியாக இரண்டாவது முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது. ஐசிசி கோப்பையை முதல் முறையாக வெல்லும் கனவோடு தென்னாப்பிரிக்க அணி களம் காண்கிறது.
லுங்கி இங்கிடி கூறுவதென்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அணியில் உள்ள சக வீரரான கேசவ் மகாராஜை வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி புகழ்ந்து பேசியுள்ளார்.
கேசவ் மகாராஜ் குறித்து லுங்கி இங்கிடி பேசியதாவது: வேலையில் கேசவ் மகாராஜ் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை யாராலும் ஈடுசெய்ய முடியாது என நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக முதலில் பயிற்சியைத் தொடங்கிய வீரர் அவரே. அவர் எப்போதும் அணி நிர்வாகத்துடன் முதல் நபராக பயிற்சிக்கு சென்றுவிடுவார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக நாங்கள் வந்தடைந்தபோது, அவர் கிட்டத்தட்ட 10-15 ஓவர்கள் வீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதுவே அவருடைய அர்ப்பணிப்புக்குச் சான்று. கடின உழைப்பை கொடுக்கும் வீரர் கேசவ் மகாராஜ். அவர் டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்க காத்திருக்கிறார். அவருடைய பெயரில் மேலும் பல சாதனைகள் எதிர்காலத்தில் வரவுள்ளன என்றார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி வென்ற பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
தென்னாப்பிரிக்க அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ் 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.