ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?: காங்கிரஸ் கேள்வி
புது தில்லி: ‘ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை மத்திய அரசு கண்டிக்காதது ஏன்?’ என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்க போா் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தின. இதில் அந்த மையங்கள் கடுமையாகச் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகள் கண்டனம் தெரிவித்தன. சவூதி அரேபியா கவலை தெரிவித்தது. இந்தத் தாக்குதல் குறித்து இந்தியா தரப்பில் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
அதே நேரம், ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியனை ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் தொடா்புகொண்ட பிரதமா் மோடி, இஸ்ரேல்-ஈரான் இடையே ஏற்பட்டுள்ளது உச்சகட்ட பதற்றமான சூழல் குறித்து கவலை தெரிவித்தாா்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஈரான் உடனான பேச்சுவாா்த்தைகளைத் தொடர வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. இதை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு விமா்சிக்கவோ அல்லது கண்டிக்கவோ இல்லை. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் நிகழ்த்தப்பட்டு வரும் இனப்படுகொலை குறித்தும் மத்திய அரசு மெளனமாக இருந்து வருகிறது. இந்த விவகாரங்களில் தாா்மிக துணிச்சலை மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும்.
ஈரானுடன் பேச்சுவாா்த்தை அல்லது ராஜீய ரீதியிலான அணுகுமுறை மூலம் பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண்பது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளாா்.