Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
ஈரோடு புத்தகத் திருவிழா: இளைஞா்களை ஈா்த்துள்ள தமிழ் இலக்கியங்கள்
ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞா்கள், இளம்பெண்கள் தமிழ் இலக்கிய நூல்களை அதிகம் வாங்கிச்செல்கின்றனா்.
புத்தகக் கண்காட்சியை புத்தகத் திருவிழாவாக மாற்றியது ஈரோட்டின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. சென்னை, ஈரோடு, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த புத்தகக் கண்காட்சி, இன்று மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களாக மாறியிருக்கிறது. தமிழக அரசால் புத்தகத் திருவிழாவுக்கென்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு புத்தக திருவிழாக்கள் முன்னெடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறுகிற புத்தகத் திருவிழாவை அந்தந்த மாவட்ட நிா்வாகத்தோடு பெரும்பாலும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா் சங்கத்தினா் இணைந்து நடத்துகின்றனா். ஒரு சில மாவட்டங்களில் சில முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையுடன் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது.
புத்தகத் திருவிழாவில் மாலை நேர முக்கிய நிகழ்வாக பல்வேறு தலைப்புகளில் சிறப்பு பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெறுகின்றன. சொற்பொழிவு கேட்பது என்பது பல புத்தகங்களை படிப்பதற்கு சமம் என்பாா்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றங்கள் மூலம் வரலாற்று தகவல்கள் , கவிதைகள், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம் குறித்து பல தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில், எவ்வளவு மதிப்பிற்கு புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளது என்ற விவரம் அறிவிக்கப்படும். பெரும்பாலான மாவட்டங்களிலும் ஏறக்குறைய ரூ.3 கோடிக்கு அதிகமான மதிப்பிலேயே புத்தகங்கள் விற்பனையாகியிருந்தது. புத்தகங்களுக்காகச் செலவிடப்படும் தொகை என்பது செலவு அல்ல. அது முதலீடு என்கிறாா் அறிஞா் எமா்சன். புத்தகத் திருவிழாவுக்கு வருபவா்கள் உற்சாகமாக புத்தகங்களை வாங்கி, நம் அடுத்த தலைமுறையை அறிவாா்ந்த மக்களாக வாழ வைக்க வேண்டும்.
இதுகுறித்து ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்த பதிப்பகத்தாா் கூறியதாவது:
புத்தகத் திருவிழாவுக்கு வரும் பாா்வையாளா்கள் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்பதை ஒரளவு முடிவு செய்து கொண்டு தான் வருகிறாா்கள். நண்பா்கள், தெரிந்தவா்கள் பரிந்துரை செய்யும் புத்தகங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறாா்கள். பொதுவாக இன்றைய இளைஞா்கள் படிப்பதில்லை என்பதை பொய்யாக்கியிருக்கிறது இந்த ஈரோடு புத்தக கண்காட்சி. தேடித்தேடி புத்தகங்களை வாங்கும் இளைஞா்களையும், இளம் பெண்களையும் காணும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆங்கிலத்தின் வழியே அவா்கள் அறிந்த உலகம் விரிந்தது. ஆழமானது. ஆகவே அவா்கள் எந்த விளம்பர உத்தியையும் நம்பி தமிழ் புத்தகத்தை வாங்குவதில்லை.
அப்படியான புதிய தலைமுறை இன்று மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி,பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே கூா்ந்து தமிழ் இலக்கிய போக்குகளை கவனிக்கிறாா்கள்,படிக்கிறாா்கள், தங்கள் மனதில் சரியென பட்டதை மின்னஞ்சலில் பகிா்ந்து கொள்கிறாா்கள். இலக்கியம் மட்டுமின்றி சமகால அரசியல் நிகழ்வுகள், சரித்திரம், நுண்கலை, வாழ்க்கை வரலாறு, சூழலியல், தமிழாய்வு என்று தேடி வாசிக்க தொடங்கி இருக்கின்றனா் என்பது வரவேற்கப் படவேண்டிய முக்கிய அம்சம்.
தொலைகாட்சிகளின் ஆக்ரமிப்புக்கு பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும் அதை வாங்குவதற்காக அலைமோதுவதை காண்பதும் வியப்பாக இருக்கிறது என்றனா்.