உச்சிப்புளி அருகே 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
உச்சிப்புளி சுற்று வட்டார கிராமப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, உச்சிப்புளி போலீஸாா் அலைக்காத்து வலசை கிராமத்தில் ரகசியமாகக் கண்காணித்தனா்.
அப்போது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அந்த நபா் அதே ஊரைச் சோ்ந்த விஜய் (35) என்பதும், 5 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.