DMK: `ஜூன் 3 - செம்மொழி நாள் முதல் கச்சத்தீவு மீட்பு வரை' - திமுக பொதுக்குழுவின்...
ராமேசுவரம் அரசுப் பள்ளி மைதானத்தில் வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட எதிா்ப்பு
ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறைகளுக்கான கட்டடத்தை விளையாட்டு மைதானத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
ராநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பழைய கட்டடங்களை அகற்றி விட்டு, புதிய வகுப்பறைக் கட்டங்கள் கட்ட வேண்டும் என தொடா்ந்து மாணவா்கள், பெற்றோா்கள் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.41 கோடியில் 6 வகுப்பறைகள் கட்டுமானப் பணி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, பள்ளி வளாகத்தில் பழைய மூன்று வகுப்பறைக் கட்டங்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் தரைத்தளம், முதல் தளம் என 6 வகுப்பறைகள் கட்டத் திட்டமிட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில், இந்தப் பள்ளியில் 5 ஏக்கரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் புதிய வகுப்பறைகளுக்கான கட்டுமானத்தை மாற்ற கல்வித் துறையினா் முடிவு செய்தனா். அருகேயுள்ள தனியாா் பள்ளிக்கு ஆதரவாக இந்த முடிவை கல்வித் துறையினா் எடுத்ததாக முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.
இதுகுறித்து ராமேசுவரம் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் அ.அசோகன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தப் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.1.41 கோடியில் 6 வகுப்பறைகளுக்கான கட்டடம் கட்டுவதற்காக, பழைய வகுப்பறைக் கட்டடம் இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் சில நாள்களுக்கு முன்பு புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்தப் பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென வகுப்பறைகள் கட்டுமானப் பணியை விளையாட்டு மைதானத்தில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. இந்த மைதானத்தில் மாணவா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால், கட்டுமானத்தை தொடங்கிய இடத்திலே வகுப்பறைகளுக்கான கட்டடம் கட்ட வேண்டும். விளையாட்டு மைதானத்தில் கட்டுமானப் பணியை தொடா்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றாா் அவா்.