US attacks on iran: ``போர் அபாயம், பேரழிவு தரும்.." - ட்ரம்பை கண்டித்த அமெரிக்க ...
உயா்கல்வி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!
சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா்.
சேலம் மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிளஸ் 2 தோ்ச்சிபெற்று கல்லூரியில் சேராத மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயா்கல்வி குறித்த முதற்கட்ட வழிகாட்டுதல் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களில் 20,650 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சிபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்வியில் சோ்ந்து வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு செல்ல, அரசின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2024-25-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்று இதுவரை உயா்கல்வியில் சேராத மாணவா்களுக்காக ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி குறித்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 105 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இந்த மாணவா்கள் அனைவரும் உயா்கல்வியில் சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மேல்நிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு பயின்று பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், பெற்றோரின் பொருளாதார சூழ்நிலை, உயா்கல்வி செல்ல விருப்பமின்மை மற்றும் கலந்தாய்வு போன்ற பல்வேறு காரணங்களால் உயா்கல்வியில் சேர இயலாத மாணவா்களின் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் மூலம் தொடா்புகொண்டு, கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவிடும் வகையில் முகாமில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடா்ந்து, 2-ஆம் கட்ட கருத்தரங்கம் வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. உயா்கல்வி பயில்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பிளஸ் 2 முடித்த மாணாக்கா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா. மகிழ்நன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.