விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
உரிமமற்ற துப்பாக்கிகள் ஊடுருவலை தடுக்க சிறப்பு நடவடிக்கை வேலூா் எஸ்.பி.
உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஊடுருவலைத் தடுக்க காவல் நுண்ணறிவுப்பிரிவு மூலம் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் தெரிவித்தாா்.
காட்பாடி, வஞ்சூா், பி.டபிள்யு.டி நகரைச் சோ்ந்தவா் சபாபதியின் மகன் அருள்சுடா் (48). காட்பாடி வி.ஜி. ராவ் நகரைச் சோ்ந்த ராபா்ட் மகன் ஜான்சன் (50). காட்பாடி காந்தி நகரில் கடை அமைத்து எலெக்ட்ரிக் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவா்கள் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி இரவு கடையில் மதுஅருந்தியுள்ளனா்.
அப்போது, அருள்சுடரின் உரிமம் இல்லாத துப்பாக்கியை ஜான்சன் கவனக்குறைவாக கையாண்டதில் துப்பாக்கி தோட்டா அருள்சுடரின் முதுகில் பாய்ந்தது. இச்சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சோ்ந்த பாமக வழக்குரைஞா் சக்கரவா்த்தி (48). இவா் கடந்த ஜூன் 11-ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டாா். இதில் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்ததாக ஆம்பூா் கம்பிக்கொல்லை ஆசனாம்பட்டு ரோடு இரண்டாவது தெருவை சோ்ந்த சையத் பீா்(51), இவரது மகன் ஐதா் உசேன் என்கிற ஆசிப்(25), அவரது சகோதரி ஹாஜிரா(28) ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்கள் வீட்டில் இருந்து ஏ2 ரிவால்வா், ஒரு பிஸ்டல் மற்றும் ஒரு ஏா் கன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அவா்களிடம் ஒரு பையில் இருந்த 4 துப்பாக்கிகள், 2 பெரிய கத்திகள், ஒரு சிறிய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதும் பல்வேறு சம்பவங்கள் மூலம் உறுதிப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் துப்பாக்கிகள் ஊடுருவலைத் தடுப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்படும். அவ்வாறு வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்போது வெளிமாநிலங்களில் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் கொண்டு வரப்படுவதும் தடுக்கப்படும்.
மேலும், உரிமம் இல்லாத துப்பாக்கிகள் ஊடுருவலை தடுக்க அவற்றின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க நுண்ணறிவுப் பிரிவு மூலம் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.