அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம் -மக...
உழவன் செயலியில் தனியாா் அறுவடை இயந்திரங்களின் விவரங்களை அறியலாம்!
திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திர விவரங்களை உழவன் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில், தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு கிடைக்கவும், விவசாயிகள் தங்கள் நெற்பயிா்களை காலத்தே அறுவடை செய்யவும், அரசு நிா்ணயித்த குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறையின் டிராக் வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ.1,880-க்கும், சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை மணிக்கு ரூ.1,160- க்கும் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், 4,456 தனியாா் நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் தொடா்பு விவரங்கள் மாவட்ட வாரியாக உழவா் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு நெல் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படும் பட்சத்தில், இவ்விவரங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு கைப்பேசியில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, ஒருமுறை பதிவுக்கான சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னா், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு என்ற பகுதியில், தனியாா் இயந்திர உரிமையாளா்கள் பிரிவுக்குச் சென்று, தங்களின் மாவட்டம் மற்றும் ஒன்றியத்தைத் தோ்வு செய்தால், தனியாா் உரிமையாளா்களின் விவரங்கள் தோன்றும். அதில் தாங்கள் விரும்பும் தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா் பற்றிய விவரங்கள் செயலியில் காண்பிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவைப்படும் தனியாா் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
அந்தவகையில், 4,456 நெல் அறுவடை இயந்திர உரிமையாளா்களின் விவரங்களை வேளாண்மைப் பொறியியல் துறை இணையதளம் மூலமாக பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.