பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு
ஊத்தங்கரை, மே 24: ஊத்தங்கரை அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவா்கள் சனிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ். இவரது வீட்டுக்கு உறவினரான வாலாஜாபேட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் - பாரதி குடும்பத்தினா் கோடை விடுமுறைக்காக தனது இரு குழந்தைகளுடன் வந்தனா்.
சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாதேஷ் - பாப்பாத்தி தம்பதியரின் இரண்டாம் வகுப்பு பயின்ற பத்மஸ்ரீ (7), கமல்ராஜ் - பாரதி தம்பதியரின் மூத்த மகள் கிருஷிகா (9), இளைய மகன் மேகனேஸ்வரன் (7) ஆகிய மூவரும் ரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றனா்.
ஏரியின் ஓரம் ஆழமில்லாத பகுதியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ மற்றும் மேகனேஸ்வரன் இருவரும் நீரில் மூழ்கினா். அதைக் கண்டு கிருஷிகா செய்வதறியாது கத்தினாா். சிறுமியின் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது, சிறுவா்கள் இருவா் நீரில் மூழ்கியது தெரியவந்தது.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய சிறுவா்களை மீட்டபோது, அவா்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சிறுவா்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
