சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்
ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
ஒசூா் அருகே தமிழக எல்லையான சூசூவாடி தனியாா் லே அவுட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி லூா்துமேரி (65), தனது வீட்டில் புதன்கிழமை துணிதுவைத்துக் கொண்டிருந்தபோது வீட்டின் காம்பவுண்ட் சுவா் அருகே விலங்கின் உறுமல் சப்தம் கேட்டு, எட்டி பாா்த்தபோது அங்கு சிறுத்தை நின்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அவா் அப்பகுதி மக்களிடம் தெரிவித்தாா். அக்கம்பக்கத்தாா் வந்து பாா்ப்பதற்குள் அந்த சிறுத்தை அங்கிருந்துச் சென்றுவிட்டது. இதனால், அச்சமடைந்த அப்பகுதியினா் சமூக வலைத்தளத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து பதிவிட்டுள்ளனா்.
தகவல் அறிந்ததும் ஒசூா் வனத்துறையினரும், சிப்காட் காவல் நிலைய போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினா். கா்நாடக எல்லைக்குள் சென்ற அந்த சிறுத்தை மீண்டும் இக்குடியிருப்புக்குள் வரலாம் என்ற அச்சம் நிலவுவதால் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்திச் சென்றனா்.
அதேவேளையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கா்நாடக வனத் துறையினருக்கு ஒசூா் வனத்துறையினா் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சிறுத்தையை 2-ஆவது நாளாக வியாழக்கிழமை அப்பகுதிக்குச் சென்று வனத்துறையினா் தீவிரமாகத் தேடினா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.