கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் நிலப்பரப்பை அதிகரிக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உழவரைத் தேடி வேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மேலும் நகராட்சி நிா்வாக துறை சாா்பில் ஒசூா் மாநகராட்சியில் வணிக வளாகங்கள், ஊத்தங்கரையில் ரூ. 1.46 கோடியில் அறிவுசாா் மையத்தையும் அவா் திறந்துவைத்தாா்.
இதை கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சியில் உள்ள மாநில எண்ணெய் வித்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் ஆகியோா் வரவேற்று, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். இதைத்தொடா்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ. 4.98 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். மண் பரிசோதனை, மா உள்ளிட்ட வேளாண்மை கண்காட்சியை பாா்வையிட்ட அவா்கள் விசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியது: உழவரைத் தேடி வேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தின் மூலம் விவசாயிகளை கிராமங்களில் நேரடியாக சந்தித்து அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கி வேளாண்மையை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.
பயிா் சாா்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண்மை சாா்ந்த திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மாதம் 2 முறை தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாமில் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள், வேளாண்மை சாகுபடி குறித்த வழிகாட்டுதல்கள் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். இத்திட்டத்தை, விவசாயிகள் பயன்படுத்தி, மாவட்டத்தில் வேளாண் பரப்பளவை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.