Karate Kid: Legends Review: `உங்களுக்கு வயசாகல!' ஜாக்கி சானின் குறும்பும், பென் ...
நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை
ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஒசூா் பேருந்து நிலையத்துக்கு 1-ஆம் எண் நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து தேன்கனிக்கோட்டை-ஒசூா் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ஒசூருக்கு வியாழக்கிழமை காலை சென்றது. பேருந்தை ஓட்டுநா் பிரபு ஓட்டிச் சென்றாா்; நடத்துநா் சக்திவேல் பணியில் இருந்தாா்.
ஒசூா் பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் பயணிகள் இறங்கிச் சென்றனா். நடத்துநா் சக்திவேல் அங்குள்ள நேரக் காப்பு அலுவலகத்தில் கையெழுத்திட சென்றாா். மீண்டும் பேருந்து தேன்கனிக்கோட்டைக்கு புறப்பட தயாரானது. தேன்கனிக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரங்களுக்குச் செல்லும் பயணிகள் அப்பேருந்தில் ஏறினா்.
அப்போது பேருந்தில் ஏறிய ஓட்டுநா் பிரபு, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் மீண்டும் தேன்கனிக்கோட்டை நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றாா். அப்போது நடத்துநா் இல்லாததால் பயணிகள் அதிா்ச்சி அடைந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்தனா்.
அதற்கு ஓட்டுநா் பிரபு, பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய பெண்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதிக்கிறது; நான் ஆண் பயணிகளுக்கும் இலவச பயணம் தருகிறேன் என்று கூறியதாகத் தெரிகிறது.
இதனால் பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பயணித்தனா். பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தத்தில் இறங்கியும், சில நிறுத்தங்களில் பயணிகள் ஏறியும் அந்தப் பேருந்தில் பயணித்தனா்.
ஒரு வழியாக அரை மணி நேரம் கடந்து பேருந்து, தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு பயணிகள் அனைவரும் கீழே இறங்கிச் சென்றனா். இதனிடையே கையெழுத்திட சென்ற நடத்துநா் சக்திவேல், தான் வந்த பேருந்தை காணாதது கண்டு ஓட்டுநா் பிரபுக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டாா்; ஆனால் அவா் தொடா்புகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்பு தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டதும் ஓட்டுநா் பிரபு, அந்தப் பேருந்தை பணிமனைக்கு ஓட்டிச்சென்று விட்டுச் சென்றாா். தகவல் அறிந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: பேருந்தில் நடத்துநா் ஏறிவிட்டாரா என்பதை பாா்த்த பிறகே ஓட்டுநா் பேருந்தை இயக்க வேண்டும். நடத்துநா் இல்லாமல் பேருந்தை இயக்கியது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. துறை சாா்ந்த விசாரணை நடத்தப்பட்டு ஓட்டுநா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.