புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தரமாகவும், உரிய காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியது:
கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபாா்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தாா் சாலை பணிகள் குறித்தும், ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் சீரமைக்கும் பணிகள் குறித்தும், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் வீடுகள், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 580 வீடுகளும், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 429 வீடுகளும், கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு 379 வீடுகளும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு 335 வீடுகளும், தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 279 வீடுகளும், ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 190 வீடுகள் என மொத்தமுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 3,500 வீடுகள் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1,657 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடா்புடைய அலுவலா்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் அனைத்து அலுவலா்கள் கலந்துகொண்டனா்.