மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை
எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம் :
அரூா்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் 8-ஆவது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தம். இந்த பேருந்து நிறுத்தம் வழியாக வேலூா், திருப்பத்தூா், சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொலைதூர நகரங்களுக்கு அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் அரசு நகா் பேருந்துகளைத் தவிர தொலைதூரம் செல்லும் பிற பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை. இதனால், எச்.ஈச்சம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மருதிப்பட்டி, எம்.வேளாம்பட்டி, தாமலேரிப்பட்டி, தாமரைக்கோழியம்பட்டி, பறையப்பட்டி, கணபதிபட்டி, கே.வேட்ரப்பட்டி, மத்தியம்பட்டி, வடுகப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் அவதியுறுகின்றனா்.
தொலைதூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படாத காரணத்தால் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பாதிக்கின்றனா்.
எனவே, அரூா் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அனைத்தும் எச்.ஈச்சம்பாடி பேருந்து நிறுத்தத்தில் நின்றுசெல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.