பேட்டிங் கை நழுவிச்செல்லும் நிலையில் ரோஹித் சர்மா..! என்ன செய்ய வேண்டும்?
'எடப்பாடி பழனிசாமி, வேலுமணிக்கு அடுத்து அண்ணாமலை' - அடுத்தடுத்து டெல்லி விசிட்; காரணம் என்ன?
நேற்று முன்தினம், தமிழ்நாட்டில் பரபரப்பாக சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்க, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியோ டெல்லிக்கு பயணமானார்.
'அதிமுக அலுவலகத்தை காண' என்று எடப்பாடி பழனிசாமி கூறினாலும், அன்று மாலை முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போதைய அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணியும் டெல்லிக்கு சென்றார்.
இதனையடுத்து, இரண்டு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை (25.03.2025) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.
அமித் ஷா பதிவு
இந்த சந்திப்பிற்கு பிறகு, அமித் ஷா, "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

எடப்பாடியின் விளக்கம் என்ன?
ஆனால், இதற்கு நேர்மாறாக, எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கின்றன. இப்போது அமித் ஷாவிடம் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
எஸ்.எஸ்.ஏ (SSA) கல்வித் திட்டத்தில் தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்,
தமிழ்நாட்டின் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும்,
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பைத் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும்,
கோதாவரி காவிரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் போன்ற மக்கள் கோரிக்கைகளைப் பற்றித்தான் 45 நிமிடங்கள் பேசினோம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. கூட்டணி பற்றி பேசுவதற்கும் இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது" என்று டெல்லி பயணம் குறித்து விளக்கமளித்தார்.
அண்ணாமலை எதற்கு செல்கிறார்?
எடப்பாடி பழனிசாமி, வேலுமணி டெல்லி விசிட்டிற்கு பிறகு, இன்று அண்ணாமலையும் டெல்லிக்கு செல்கிறார்.
இந்தப் பயணத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைமையுடன் ஆலோசனை நடத்துவார் அண்ணாமலை என்று எதிர்பார்க்கப்படுகிறது.