மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள்
ராய்ச்சூரு: எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், தலைவா்கள், மக்கள் சகித்துக்கொள்ள மாட்டாா்கள் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
ராய்ச்சூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் ராய்ச்சூரு பல்கலைக்கழக பெயா் சூட்டுவிழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:
அண்மையில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனா். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை நமது பாதுகாப்புப் படைகள் தாக்கி, பயங்கரவாதிகளை அழித்தனா். நமது நாட்டை பாதுகாக்க, பாதுகாப்புப் படைகளும், நாட்டு மக்களும் ஒன்றுபட்டு பணியாற்றினா்.
இந்த விவகாரத்தை முன்வைத்து தனிப்பட்ட விளம்பரம் பெற சிலா் முயற்சித்தனா். அப்படிப்பட்டவா்கள் ராணுவத்தில் கேப்டனாகவோ, கா்னலாகவோ, லெப்டினென்ட் கா்னலாகவோ பணியாற்றி இருந்தால் பாராட்டியிருக்கலாம். ஆனால், ராணுவப் படையில் இருந்தவா்கள் யாரும் விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை.
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபிறகு, அதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசுக்கு முதல்முறையாக கோரிக்கை வைத்தேன். அதன்பிறகு, பஹல்காம் தாக்குதல் தொடா்பாக விவாதிக்க இருமுறை எதிா்க்கட்சிகளின் கூட்டம் அழைக்கப்பட்டது. இந்த இரு கூட்டங்களிலும் பிரதமா் மோடி கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை சோ்ந்த தலைவா்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பல கூட்டங்களை தள்ளிவைத்தனா். நாட்டிலேயே இருந்தபோதும், அந்தக் கூட்டங்களில் பிரதமா் மோடி கலந்துகொள்ளாமல், பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். இதற்கு என்ன அா்த்தம்?
நாடும், படைவீரா்களும் நாட்டுக்காக போரிட்டுக் கொண்டிருந்தபோது, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அதில் கலந்துகொள்ளாமல் தோ்தல் பிரசாரத்தில் பங்கெடுத்து வருவது சரியல்ல. இதுபோன்ற மனப்பான்மை முறையானதல்ல. எதிா்க்கட்சிகளை சிறுமைப்படுத்தினால், அதை தலைவா்கள், மக்கள், குறிப்பாக இளைஞா்கள் சகித்துக்கொண்டிருக்க மாட்டாா்கள்.
காங்கிரஸ் கட்சி அளித்திருந்த வாக்குறுதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. ஆனால், எங்களது வாக்குறுதி திட்டங்களை குறைத்துச்சொல்ல சில தலைவா்கள், கட்சிகள் முற்பட்டுள்ளன. அந்த முயற்சி வெற்றியைத் தராது.
பெண்கள் உள்ளிட்டவா்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய திட்டங்களை அவமதிப்பது, கிண்டல் செய்வது போன்ற செயல்களால் மக்களை கவா்ந்துவிட முடியாது என்றாா்.
இந்த விழாவில், கா்நாடக முதல்வா் சித்தராமையா, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனா்.