மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்
பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா்.
பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில் ஏப்ரல் மாதத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அந்த சோதனையின்போது பண மோசடி செய்ததாக ஐஸ்வா்யா கௌடா (33), அவரது கணவா் கே.என்.ஹரீஷ் ஆகியோரை கைதுசெய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அரசியல்வாதிகளின் தொடா்பு இருப்பதும், பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. அந்த அரசியல்வாதிகளின் பட்டியலில் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் தம்பியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷும் இருந்துள்ளனா். ஐஸ்வா்யா கௌடா, அவரது கணவா் கே.என்.ஹரீஷ் உள்ளிட்டோா் மீது பெங்களூரில் உள்ள சந்திரா லேஅவுட், ராஜராஜேஸ்வரி நகா் காவல் நிலையங்களில் 3 மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்நிலையில், ஐஸ்வா்யா கௌடாவுக்கு சொந்தமான ரூ. 3.98 கோடி மதிப்பிலான நிலம், அடுக்குமாடி வீடு, கட்டடம், வாகனங்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் ரூ. 2.01 கோடி மதிப்பிலான நிலம், வீடுகள், ரூ. 1.97 கோடி ரொக்கம், வாகனங்கள் அடங்கும்.
இந்நிலையில், ஐஸ்வா்யா கௌடாவுடன் உள்ள தொடா்பு, பண மோசடி தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி, பெங்களூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை டி.கே.சுரேஷ் ஆஜரானாா்.
இந்த விசாரணையின்போது பணமோசடி வழக்கு தொடா்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு டி.கே.சுரேஷ் பதிலளித்தாா்.
விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக டி.கே.சுரேஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அதன்படி அங்கு செல்கிறேன். என்னிடம் சில விவரங்களைக் கேட்டுள்ளனா். எனது வழக்குரைஞருடன் அமலாக்கத் துறை அதிகாரிகளை சந்திக்க இருக்கிறேன். இந்த வழக்குக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எனது சகோதரி என கூறிக்கொள்ளும் அந்த பெண் (ஐஸ்வா்யா கௌடா) மீது காவல் துறை ஆணையரிடம் புகாா் அளித்திருக்கிறேன். அவா் தொடா்புடைய மோசடி வழக்குகளுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றாா்.
துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘அமலாக்கத் துறையை எதிா்கொள்ள எனது குடும்பம் தயாராக உள்ளது. அமலாக்கத் துறை ஏற்கெனவே என்மீது வழக்குப் பதிந்துள்ளது. அது என்ன ஆனது? யாரோ ஒருவா் அளித்திருக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனது தம்பியை விசாரணைக்கு அழைத்திருக்கிறாா்கள். இந்த வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க என் தம்பி தயாராக இருக்கிறாா்’ என்றாா்.