எஸ்400 வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா - ரஷியா பேச்சுவார்த்தை!
தரையிலிருந்து வான்வெளி இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷிய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஷியாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கண்டித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் மீது முதலில் 25 சதவிகித வரியையும், பின்னர் கூடுதலாகவும் 25 சதவிகித வரியை விதித்தார்.
இது இந்திய சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துவருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஷாங்காய் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன பிரதமர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் மூவரும் சந்தித்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி நாடுகளாக இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட மூன்று நாடுகளும் ஒன்றாக இணைந்திருப்பது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் எனக் கூறிய அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா அடிபணியவில்லை” என்றும் கூறியிருந்தார்.
அதை நிரூபிக்கும் விதமாக, அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை கூடுதலாக வாங்க இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ சக்தியை எதிர்கொள்ளும் நோக்கில், 5 எஸ்-400 ட்ரையம்ஃப் வான்பாதுகாப்பு அமைப்புகளை வாங்க 2018 ஆம் ஆண்டு மாஸ்கோவுடன் 5.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில், மேலும் இரு யூனிட்களை 2026- 2027 ஆம் ஆண்டுக்குள் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ரஷிய ராணுவக் கூட்டமைப்பின் தலைவர் திமிட்ரி ஷுகயேவ் கூறுகையில், “ரஷியாவின் எஸ்400 டிரையம்ப் வான்பாதுகாப்பு அமைப்பை இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அதனைக் கூடுதலாக, வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றார்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா அடிபணியவில்லை என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியிருந்தார்.
பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவுக்கு ஆயுதங்கள் இறக்குமதி செய்தாலும், இந்தியாவுக்கான முன்னணி ஆயுத விநியோகஸ்தராக ரஷியா இருக்கிறது. கடந்த 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரஷியாவிலிருந்து 36 சதவிகித ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நீண்டகால ராணுவப் பாதுகாப்பு கூட்டாளிகளான இந்தியாவும் ரஷியாவும் ஏராளமான பாதுகாப்புத் திட்டங்களில் இணக்கமாக இருக்கின்றன.
இவற்றில் டி-90 டாங்கிகள் மற்றும் எஸ்யு-30 எம்கேஐ போர் விமானங்கள், மிக்-29 மற்றும் கமோவ் ஹெலிகாப்டர்கள், விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, இந்தியாவில் ஏகே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைத் திட்டகள் ஆகியவையும் அடங்கியுள்ளன.
முன்னதாக, கடந்த மே மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, இந்திய ஆயுதப் படைகள் வெற்றிகரமாக பதிலடி கொடுத்தன.
ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தான் ராணுவத்தின் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து வெடித்துச் சிதறடித்தது குறிப்பிடத்தக்கது.