ஏற்காடு மலைப்பாதையில் ரீல்ஸ்: இளைஞா்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்த காவல் துறை
ஏற்காடு மலைப் பாதையில் எச்சரிக்கை பலகையை உடைத்து ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட இளைஞா்களின் பெற்றோரை அழைத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 இளைஞா்களும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை விழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞா்கள், மலைப்பாதை சாலையில் அங்குமிங்கும் வாகனம் ஓட்டியும், வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனா். மேலும், மலைப்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையை தூக்கிவீசுவது போன்றும் விடியோ பதிவிட்டனா்.
இந்த சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கிவீசும் விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தனா். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இது தொடா்பாக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சோ்ந்த ஆகாஷ் (21), ஆண்டிமடத்தை சோ்ந்த சிவா (23), பிரவீண் (21), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (19), இளையூரைச் சோ்ந்த அரவிந்த் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா். பின்னா் அவா்களது பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்தனா். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளைஞா்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனா்.