ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - என்ன நடந்தது?
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் - இந்த மூன்று பெரிய உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து கொண்டனர்.
இது தான் உலக அளவில் தற்போதைப ஹாட் டாப்பிக்.
ஏன் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானது?
இந்தக் கேள்வி எழுவது மிகவும் நியாயமானது தான்.
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளின் தலைக்கு மேலும் அமெரிக்காவால் கத்தி தொங்கி கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

என்னென்ன கத்திகள்?
இந்தியா: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவிற்கு கூடுதல் 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள மொத்த வரி 50 சதவீதமாகிறது.
இந்த வரியால் இந்தியாவில் ஜவுளி, ஆட்டோமொபைல், கடல் உணவுகள், நகைகள், நவரத்தினங்கள் உள்ளிட்ட துறைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இன்னும் இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் முடிவில் 'நல்ல காலம் பிறக்கும்' என்ற நம்பிக்கையில் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
இப்போதைய பொருளாதார நிலைமையை சமாளிக்க, உற்பத்தியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் வரி அமலுக்கு வருவதற்கு முன்பே பெரிய அளவில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துவிட்டு பேச்சுவார்த்தையின் முடிவிற்காக காத்திருக்கிறார்கள்.
ரஷ்யா: மூன்று ஆண்டுகளைத் தாண்டியும், இன்னும் ரஷ்யா - உக்ரைன் போர் முடிந்தபாடில்லை.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர, ஆரம்பத்தில் புதினை நட்பு ரீதியில் அணுகினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால் எந்தப் பயனும் இல்லை.
இதனால், 'ரஷ்யா மீது வரி விதிக்கப்படும்' என்று பயமுறுத்தியும், 'ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகளான இந்தியா, பிரேசில் மீது கூடுதல் வரி விதித்தும்' அமைதி பேச்சுவார்த்தைக்காக புதினை அலாஸ்காவிற்கு வரவழைத்தார் ட்ரம்ப்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த ட்ரம்ப் - புதின், ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சந்திப்புகளில் தீர்மானிக்கப்பட்ட புதின் - ஜெலென்ஸ்கி சந்திப்பு இன்னும் நடைபெறவில்லை. அதற்கான அறிகுறிகளும் தெரியவில்லை. இதனால், ட்ரம்பின் மனம் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடும்.

சீனா: கடந்த ஏப்ரல் மாதத்தில் பரஸ்பர வரியை அறிமுகப்படுத்தியதிலிருந்து சீனாவுக்கு மீதான வரி சதவீதத்தை அடுக்கிக் கொண்டே வந்தார் ட்ரம்ப். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீது பதிலடி வரிகளை விதித்து வந்தது.
ஆனால் இந்த நிலை ஜூன் மாதத்திற்குப் பிறகு தலைகீழாக மாறிவிட்டது.
சீனாவுக்கு 145 சதவீதம் வரை வரி விதித்திருந்த அமெரிக்கா, இப்போது அதை 30 சதவீதமாகக் குறைத்துள்ளது.
ரஷ்யாவுடன் வணிகம் செய்வதால் இந்தியா, பிரேசில் மீது கூடுதல் வரி விதித்த போதிலும், ரஷ்யாவின் முக்கிய இறக்குமதி நாடான சீனாவை ட்ரம்ப் தொடவில்லை.
இதற்கு காரணம், சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா தங்களது பெரும்பாலான தயாரிப்புகளின் மூலப்பொருட்களுக்கு சீனாவையே நம்பியிருப்பதால், இப்போதைக்கு சீனாவுக்கு எதிரான எந்தப் பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மாதிரியான சூழலில்தான் மோடி, ஷி ஜின்பிங், புதின் சந்திப்பு நடைபெற்றது.
மேலும், இந்த மூன்று நாடுகளும் வேறொரு வகையிலும் அமெரிக்காவுடன் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுதான் பிரிக்ஸ்.
பிரிக்ஸ்
உலகின் தெற்கு பகுதியில் இருக்கும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். (இந்த கூட்டமைப்பில் தற்போது வேறு சில நாடுகளும் இணைந்துள்ளன.)
ஆக, இந்த நாடுகளின் ஒற்றுமை அமெரிக்காவைப் பாதிக்கும் என்று டிரம்ப் கருதுகிறார். இந்த நாடுகள் உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இன்னொரு நாணயத்தை கொண்டு வரலாம் என்று அவர் நினைக்கிறார்.
அதனால், பிரிக்ஸ் நாடுகளின் மீது 10 சதவீத வரி விதிக்க உள்ளதாக அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் சீனாவில் புதின், "பிரிக்ஸ் மற்றும் உலக நாடுகள் மீது விதிக்கப்படும் அழுத்தங்களுக்கு எதிராக சீனாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படும்" என்று பேசியுள்ளார். இது நிச்சயம் ட்ரம்புக்கான மறைமுகத் தாக்குதல்தான்.

சீனா சென்ற மோடி
எல்லை பிரச்சினை காரணமாக விரிசல் ஏற்பட்டிருந்த இந்தியா - சீனா நட்பு, சமீப காலங்களில் மீண்டும் துளிர்விட்டுள்ளது.
தங்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படாத போதிலும், இந்தியாவிற்கு 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தபோது, இந்தியாவிற்காக குரல் கொடுத்தது சீனா.
ஷாங்காய் உச்சி மாநாட்டிற்கு சீனா செல்ல மோடி ஒப்புக்கொண்டதே, உலக அரங்கில் ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்பட்டது.
2020-ம் ஆண்டு நடந்த கிழக்கு லடாக் எல்லை பிரச்சினை காரணமாக 7 ஆண்டுகளாக சீனா செல்லாத மோடி, நேற்று முன்தினமும் நேற்றும் சீன சுற்றுப்பயணத்தில் இருந்தார். அவருக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டது.
மேலும், அடுத்த சில தினங்களில் இரு நாடுகளுக்கிடையேயான நேரடி போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
ஜெலன்ஸ்கியின் வேண்டுகோள்
இதுவரை ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்காக ட்ரம்ப்பையே மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் ஜெலென்ஸ்கி.
ஆனால், இதுவரை புதின் எந்தப் பிடியையும் கொடுக்காத நிலையில், மோடி சீனாவிற்கு செல்வதற்கு முந்தைய நாள் (கடந்த சனிக்கிழமை) ஜெலென்ஸ்கி அவருக்கு போன் அழைப்பு செய்துள்ளார்.
புதினுடன் நடந்த சந்திப்பின் போது, போர் நிறுத்தம் குறித்து பேசுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவே ட்ரம்புக்கு சற்று அதிர்ச்சிகரமான விஷயமாக இருந்திருக்கலாம்.
நேற்று நடந்த சந்திப்பில் மோடி, புதின், ஷி ஜின்பிங் மூவரும் ஒன்றாக நின்று சிரித்துக் கொண்டு இணக்கமாகப் பேசியது, இவர்களின் ஒற்றுமைக்கான 'சிக்னல்' என்று எடுத்துக்கொள்ளலாம்.

புதின் கார்
மாநாடு முடிந்து விருந்திற்கு செல்லும்போது காத்திருந்த புதின், தனது காரிலேயே மோடியை அழைத்துச் சென்றுள்ளார். இது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
இந்த உச்சி மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் வந்திருந்தாலும், இந்த மூவரின் சந்திப்பே பெரிதாக பேசப்படுகிறது. இத்தனைக்கும் பாகிஸ்தானும் சீனாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் கூடுதல் தகவல்.
ட்ரம்ப் குமுறல்
இந்த மாநாடு முடிந்து மோடி நாடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது ஒருதலைப்பட்சமான பேரழிவு" என்று பதிவிட்டுள்ளார். இது நிச்சயம் அவரது கோபத்தையும் அதிருப்தியையும் காட்டுகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்தால், எதாவது முடிவு எடுத்தால் அது அமெரிக்காவிற்கு ஆபத்தாக முடிவதற்கான வாய்ப்பு அதிகம். இதையே ட்ரம்பின் குமுறல் காட்டுகிறது.
இத்துடன் இந்தக் காட்சிகள் முடிவடையவில்லை. இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வருகிறார் புதின். இன்னும் இந்தியா - ரஷ்யா வணிகம் தொடர்கிறது. இந்தியா, சீனா, ரஷ்யா நட்பு உறுதியாகிறது.
ஆக மொத்தம், ட்ரம்பின் தற்போதைய மைண்ட்வாய்ஸ், 'ஒண்ணு கூடிட்டாங்காய்யா... ஒண்ணு கூடிட்டாங்க!'