ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!
ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிரிமியா நிலப்பகுதி மற்றும் அந்நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் பறந்த உக்ரைன் ராணுவத்தின் 121 டிரோன்களை நேற்று (மே.1) ஒரே இரவில் ரஷியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்தத் தகவலை ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், கருங்கடல் பகுதியில் ரஷியாவின் கடற்படை தளம் அமைந்துள்ள கிரிமியாவின் செவஸ்டபோல் பகுதியில் இயக்கப்பட்ட 89 டிரோன்களும், கருங்கடல் பகுதியில் 23 டிரோன்கள் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், செவஸ்டபோல் நகரத்தின் ஆளுநர் மிகாயில் ரஸ்வோஸாயேவ் கூறியதாவது: ”உக்ரைன் டிரோன்கள் மூலம் மிகப் பெரியளவிலான தாக்குதலை நடத்த முயன்றது. ஆனால், ரஷியாவின் கடற்படை மற்றும் நிலம் சார்ந்த விமானப் படையின் கூட்டு முயற்சியினால் அந்தத் திட்டம் முறியடிக்கப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், இந்தத் தாக்குதலில் க்ராஸ்னோதார் பகுதியில் 4 டிரோன்களும், ஒர்யோல் பகுதியில் 2 டிரோன்களும் மற்றும் பிரயான்ஸ்க், பெல்கோரோத் ஆகிய பகுதிகளில் தலா 1 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒரு கொரில்லாவை 100 மனிதர்கள் வீழ்த்த முடியுமா? இணையத்தைக் கலக்கும் விமர்சனங்கள்!