குகையில் 2 குழந்தைகளுடன் தங்கி ஆன்மிக வழிபாடு நடத்திய ரஷிய பெண் மீட்பு!
ஒரே நாடு ஒரே தோ்தல்: ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்
‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி தெரிவித்தாா்.
மேலும், அடுத்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ஒரே நாடு ஒரே தோ்தல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.எம்.லோதா மற்றும் எஸ்.ஏ.போப்டே ஆகியோரிடம் கருத்து கேட்கவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தின்போது உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனா்.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பி.பி.சௌதரி கூறியதாவது: ஒரே நாடு ஒரே தோ்தல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்பட சட்ட வல்லுநா்களுடன் நாடாளுமன்ற கூட்டுக்குழு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அவா்களின் கருத்துகள் மூலம் இந்த விவகாரத்தில் எழுந்த பல்வேறு குழப்பங்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்று நாட்டு மக்கள் உணரும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக்குழு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இறுதி அறிக்கையை சமா்ப்பிக்கும் முன் மேலும் சிலரிடம் கருத்துகளை பெற குழு உறுப்பினா்கள் விரும்பினால் கூடுதல் அவகாசம் கோரி நாடாளுமன்றத்திடம் அனுமதி கேட்கப்படும் என்றாா்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக சட்ட விதிகளில் திருத்தங்கள் மேற்கொண்டு அரசமைப்புச் சட்ட (129-ஆவது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டத் திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் உருவாக்கப்பட்டன.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. மசோதாக்களுக்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, இரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
39 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பி.பி.செளதரி நியமிக்கப்பட்டாா்.
இந்தக் குழு சட்ட நிபுணா்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகளிடம் பல்வேறுகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.