திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிரதாப் விளக்கம்
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றி இருக்கிறது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து காலையில் கோவைக்குப் புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி, சதாப்தி ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை - சென்ட்ரல் மைசூரு இடையே காலையில் இயக்கப்படும் வந்தே பாரத் மற்றும் சதாப்தி ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
சென்னை - பெங்களூரு இடையே இன்று காலை இயக்கப்படும் டபுள் டெக்கர், பிருந்தாவன் ரயில்களும், சென்னை - திருப்பதி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பேட்டி அளித்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப், " ஐஓசி மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தீ விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அதிகாலை 5.20 மணிக்குத் தீப்பிடித்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் இல்லை.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. சரக்கு ரயிலின் பெட்டி தடம் புரண்டதே தீ விபத்துக்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்துப் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.