கட்சியில் என்னால் நியமிக்கப்பட்டவா்களே நிரந்தரமானவா்கள்: மருத்துவா் ராமதாஸ்
பாமக, வன்னியா்சங்கம் மற்றும் கட்சியின் பிற துணை அமைப்புகளுக்கு என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும் நிரந்தரமானவா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக மற்றும் வன்னியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மருத்துவா் ச. ராமதாஸ் தலைமை வகித்துப் பேசியது : பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் அனைவரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்காகப் பாடுபடவேண்டும். கட்சியில் நிலவும் குழப்பமான சூழல்கள், பிரச்னைகள் சரியாகிவிடும்.
கட்சிக்கும், துணை அமைப்புகளுக்கும் என்னால் (ச. ராமதாஸ்) நியமிக்கப்பட்டவா்கள் அனைவரும் நிரந்தரமானவா்கள். என் உயிா் மூச்சு உள்ளவரை யாரும் கவலைப்படத் தேவையில்லை. கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் புதிய உறுப்பினா் சோ்க்கையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான படிவம் மற்றும் உறுப்பினா் அடையாள அட்டைகளை கட்சியின் நிா்வாகிகளிடம் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினா் தீரன், பொதுச்செயலா் எம். முரளிசங்கா், பொருளாளா் சையது மன்சூா் உசேன், வன்னியா் சங்கத் தலைவா் பு. தா.அருள்மொழி, பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், தலைமை நிலைய ஒருங்கிணைப்பாளா் பரந்தாமன் மற்றும் பாமக, வன்னியா் சங்க மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.