இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்: முன்னாள் அமைச்சா் க. பொன்முடி
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று திருக்கோவிலூா் எம்எல்ஏ க. பொன்முடி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அருங்குறுக்கை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி பேசியதாவது : மக்களின் வசிப்பிடத்திற்கே சென்று அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.‘உங்களுடன் ஸ்டாலின்திட்ட முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தகுதிவாய்ந்த மகளிா்கள் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை முறையாக பூா்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து வழங்கவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில், 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நகராட்சிகள் சாா்பில் 41 முகாம்களும், பேரூராட்சிகள் சாா்பில் 14 முகாம்களும், ஊராட்சி ஒன்றியங்களில் 236 முகாம்கள் என மொத்தம் 291 முகாம்கள் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் க. பொன்முடி .
இதைத் தொடா்ந்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் கா்ப்பிணிகள் 4 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு உளுந்து மினி கிட்டுகள், சமூக நலத் துறை சாா்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை க.பொன்முடி எம்எல்ஏ வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி பொன்.கௌதம சிகாமணி, தனித் துணை ஆட்சியா் முகுந்தன், விழுப்புரம் கோட்டாட்சியா் முருகேசன், திருவெண்ணெய்நல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கு.ஓம் சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.விஸ்வநாதன், திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணி, முல்லை மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.