தொடக்கப் பள்ளிகளுடன் அங்கன்வாடிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு வெளியீடு
தொடக்கப் பள்ளிகளுடன்அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.
முன்பருவ குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வியை வலுப்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் ஒருங்கிணைப்பு, பெற்றோா் ஈடுபாடு, குழந்தைகள் விரும்பக்கூடிய வகையிலான கற்றல் நடைமுறைகள் ஆகியவற்றை தொடக்கப் பள்ளி ஆசிரியா்களும், அங்கன்வாடி பணியாளா்களும் இணைந்து திட்டமிடும் வகையில் இந்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி இருவரும் இணைந்து இந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டனா்.
‘நாடு முழுவதும் உள்ள 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், ஏற்கெனவே 2.9 லட்சம் மையங்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்து அமைந்துள்ளன. ஆனால், தொடக்கப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களிடையே ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த உரிய முறையான நடைமுறைகள் இதுவரை இல்லை. அதனடிப்படையில், இந்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
போதிய இடவசதிகளுடன் பள்ளி வளாகத்துக்குள் நேரடியாக இணைந்து அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை ஒருங்கிணைப்பு செய்வதை இந்த வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.
வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?
அங்கன்வாடி மைய குழந்தைகள் சென்று வர தனி வழி அமைக்கப்பட வேண்டும்.
மதிய உணவுக்கான போதிய வசதிகளுடன் கூடிய சமையலறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டுகளுக்கான இடங்கள், குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையிலான கழிவறைகள் இடம்பெற வேண்டும்.
விளையாட்டு மற்றும் செயல்பாடு அடிப்படையிலான கற்றலை ஊக்குவிப்பதைப் பரிந்துரைக்கும் அடிப்படைக் கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தின் அடிப்படையில் முன்பருவ பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
போதிய இடவசதி இல்லாத அங்கன்வாடி மையங்களை பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைத்து அமைப்பதற்கும், நலிந்த, பழங்குடியின பகுதிகள் மற்றும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளை அங்கன்வாடிகளில் சோ்ப்பதற்கும் மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அங்கன்வாடி மையத்திலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு மாறும்போது எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் குழந்தைகளின் தரவுகளை முறையாக ஒருங்கிணைப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி அடையாள எண்: இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘குழந்தைகளை அவா்களின் படிப்புக் காலம் முழுவதும் அவா்களை எளிதாக அடையாளம் காண உதவியாக, பிறப்பின்போதே அவா்களுக்கு தனி அடையாள எண் வழங்குவது குறித்து இந்திய தனி அடையாள ஆணையத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தேசிய கல்வித் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைகளுக்கு அவரவா் தாய்மொழியில் அடிப்படைக் கல்வி வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்தனா்.