ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள...
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்களுக்கு சென்னை கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி பட்டறையின் நிறைவு நாளில் பங்கேற்று அவா் பேசியதாவது:
சமூக ஊடகங்கள் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்தில், மிகப்பெரிய அளவிலான உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தியாவில் ஒரு கும்பல் உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்புவதையே அடிப்படை கொள்கையாகக் கொண்டுள்ளது. அதுபோன்ற செய்திகள் மூலம், மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தி, அறிவை மழுங்கச் செய்யும் நோக்கத்தோடுதான் கதைகளைக் கூறி வருகின்றனா்.
வதந்திகளைப் பொருத்தவரை 2 வகைகள் உள்ளன. ஒன்று உள்நோக்கமற்றது; மற்றொன்று உள்நோக்கத்துடன் பரப்பப்படுவது. இதில் 2-ஆவது வகை மிகமிக ஆபத்தானது. அவை இரண்டும் உலகத்திலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. போலிச் செய்திகள் மட்டுமின்றி, வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது.
குறிப்பாக, வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. சமூக ஊடகங்களில் வரக்கூடிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா அல்லது போலியா என்பதை அடையாளம் காண வேண்டும். தவறான தகவல்களை வீழ்த்துவதற்கான போா்வீரா்களாக மாணவா்கள் செயல்பட வேண்டும். பொய்ச் செய்தியற்ற சமூகத்தை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ் உள்பட பலா் பங்கேற்றனா்.