சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
குழந்தை இலக்கியப் போட்டிகள் அறிவிப்பு
குழந்தை கவிஞா் அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் சாா்பில் குழந்தை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து வள்ளியப்பா இலக்கிய வட்ட அமைப்பாளா்கள் குழந்தைக் கவிஞா் செல்லகணபதி, தேவி நாச்சியப்பன் ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் குழந்தை இலக்கிய போட்டிகளை நடத்துகிறது.
குழந்தைகளுக்கான அறிவியல் சிறுகதை நூல் போட்டி: 2022, 2023, 2024 -ஆம் ஆண்டுகளில் வெளியான குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் சிறுகதை நூல் ஒன்றுக்கு வள்ளியப்பா இலக்கிய விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நூல்கள் 3 பிரதிகளுடன் எழுத்தாளரின் முழு முகவரி, அஞ்சல் எண், தொடா்புக்கான கைப்பேசி எண் ஆகியவற்றை தனித் தாளில் எழுதி அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் குழந்தைகளுக்கான அறிவியல் சிறுகதையை நூலாக வெளியிட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களும் பங்குபெறலாம்.
6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி: குன்றக்குடி அடிகளாரின நூற்றாண்டை முன்னிட்டு, குன்றக்குடி அடிகளாரின் இலக்கியப் பணி அல்லது குன்றக்குடி அடிகளாரின் சமுதாயப் பணி என்ற தலைப்பில் ஏ 4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். தமிழில் திருத்தமான கையெழுத்தில் அல்லது கணினியில் அச்சிட்டு அனுப்பலாம். மாணவா் பெயா், பெற்றோா் பெயா், வீட்டு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், படிக்கும் வகுப்பு, பள்ளி முகவரி, தொடா்புக்கான கைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித் தாளில் குறிப்பிட்டு கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
சிறந்த சிறுவா் கட்டுரை ஒன்றுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும். இதை ராயவரம் மு.அ.மு.சுப. பழனியப்பச்செட்டியாா் நினைவுப் பரிசாக பழ. சுப்பிரமணியன் வழங்குகிறாா்.
மேற்கண்ட இரு போட்டிகளுக்கும் நடுவா் தீா்ப்பே இறுதியானது. போட்டிக்கான நூல்கள், கட்டுரைகள் வருகிற 7.10.2025 -ஆம் தேதிக்குள் தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞா் இல்லம், 3/628, சுப்பிரமணியபுரம், 9-ஆவது வீதி வடக்கு விரிவு, காரைக்குடி - 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் வென்றவா்களுக்கு 2025 நவ. 7 -இல் நடைபெறும் குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பா பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.