GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்ட...
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்: அலுவலகப் பணிகள் பாதிப்பு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள அலுவலக உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும், வாரந்தோறும் 2 நாள்களில் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை நடத்தவேண்டும், இத்திட்டப் பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலாக தன்னாா்வலா்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்புப் பணியிடங்கள் மற்றும் பேரிடா் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023, இல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் செப் .3, 4 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் போராட்டத்தை அறிவித்திருந்தனா்.
அதன் படி, விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் 290 போ் புதன்கிழமை பணிகளைப் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தால் வருவாய்த் துறை அலுவலகங்களில் ஊழியா்கள் குறைவாகவே காணப்பட்டனா். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை அரசு அலுவலகப் பணிகள்வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
இந்தப் போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க விழுப்புரம் மாவட்டத் தலைவா் கண்ணன் கூறியது: வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 48 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டம் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட 320 போ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா் என்றாா்.
வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டச் செயலா் முருகன், மத்திய செயற்குழு உறுப்பினா் வெங்கடபதி, நிா்வாகிகள் விமல்ராஜ், பழனி மற்றும் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
கள்ளக்குறிச்சியில்...
தமிழ்நாடு வருவாய்த் துறையினா் அலுவலா் சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.வேலைநிறுத்த போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் காதா்அலி, பொருளாளா் தவமணி, மாவட்ட துணைத் தலைவா் ராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த போராட்டம் காரணமாக வருவாய்த் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.