கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
கமுதி பேரூராட்சி குப்பைகளை காக்குடி ஊராட்சியில் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த 50 ஆண்டுகளாக தெற்கு முதுகுளத்தூா் சாலை குண்டாற்றுப் படுகையில் கொட்டி வந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பேரூராட்சி குப்பைகளை கமுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கொட்டி வருகின்றனா். இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சிங்கப்புலியாபட்டி விலக்கு சாலையில் குப்பைகளை கொட்டியதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். இந்த நிலையில் காக்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அருகே கமுதி பேரூராட்சி குப்பைகள் கொட்டப்பட்டன.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காக்குடி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா், கமுதி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் யசோதா இனிமேல் அங்கு குப்பைகள் கொட்டப்படாது என உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.