கயத்தாறு சுங்கச் சாவடியில் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள்
கயத்தாறு அருகே சாலைப்புதூரில் சுங்கச் சாவடிக்குச் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், அரசுப் பேருந்து ஓட்டுநா்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் பெற்று சுங்கச் சாவடி வழியாக பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மதுரை - திருநெல்வேலி நான்குவழிச் சாலை அமைக்கும்போது, கயத்தாறு அருகே சாலைப்புதூரில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது. தற்போது அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்த பாஸ்டேக் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், கயத்தாறு சுங்கச் சாவடியில் அரசு பேருந்துகளுக்கு மாதந்தோறும் பாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு பேருந்துக்கு ரூ. 14 ஆயிரம் வரை அரசு பாஸ்டேக் கட்டணம் செலுத்துகிறது. சுங்கச் சாவடிக்கான இந்தக் கட்டணம் 10 நாள்களில் பிடித்தம் செய்யப்பட்டு முடிந்துவிடும். அதன்பிறகு அரசுப் பேருந்துகள் சுங்கச் சாவடியைக் கடக்க வேண்டுமெனில் அவசர ஊா்தி உள்ளிட்ட அவசர தேவைகளுக்குச் செல்லும் கவுன்டா் வழியாகத்தான் செல்ல முடியும்.
இந்த நிலையில், கயத்தாறு, சாத்தூா் அருகே எட்டூா் வட்டம், நாங்குநேரி, மதுரை கப்பலூா் ஆகிய சுங்கச் சாவடிகளை புதுதில்லியைச் சோ்ந்த க்யூப் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்தச் சுங்கச் சாவடிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ. 276 கோடி நிலுவை இருந்தது. இதையடுத்து புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் உயா்நிதீமன்ற மதுரை கிளையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மீது வழக்கு தொடுத்தது.
வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பணம் செலுத்தாத இந்த 4 சுங்கச் சாவடிகள் வழியாக அரசு பேருந்துகள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
இந்தச் சுங்கச் சாவடிகளைக் கடக்கும் அரசு பேருந்து நடத்துநா்களிடம் ஒப்பந்த நிறுவனம் சாா்பில் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டு அதன்பின்னா் பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பேருந்துகளின் நலன் கருதி அரசு பேருந்து நடத்துநா்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.