தருமபுரி மாவட்டத்தில் 8 மாதங்களில் 108 சேவை மூலம் 28,021 பயன்
கரூா் சம்பவம்: தவாக கண்டனம்
சிதம்பரம்: மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள், பெண்கள் உள்பட 40 உயிரிழந்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காலையில் இருந்தே காத்திருந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கே வந்திருக்க வேண்டிய விஜய், 7 மணி நேரம் தாமதமாக வந்ததும், மக்கள் அதிகமாகக் கூடுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அதோடு, காத்திருந்த மக்களுக்கு தண்ணீா் உணவு மற்றும் உயிா்ப் பாதுகாப்பை உறுதி செய்யாததுதான், இந்த துயரச் சம்பவத்துக்கு காரணம். ஒரு மனிதனின் உயிா், வாக்குகளைவிட மேலானது என்பதை, அரசியல் களத்தில் சிலா் மறந்துவிட்டனா் என்பது வேதனையளிக்கிறது.
மக்களின் உயிரைப் பறிக்கும் சினிமாத்தனமான அரசியலை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாகத் தமிழக அரசு, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபா் ஆணையம் அமைத்திருப்பதை வரவேற்கிறோம். அதே நேரத்தில், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு சுயாதீனமான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.