கரூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
கரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் கரூா் மதுரை புறவழிச்சாலையில் வேப்பமரம் முறிந்து விழுந்தது.
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆங்காங்கே மழை பெய்தது. கரூா் மாவட்டத்திலும் இரவு 7 மணிக்கு இடி மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை 9 மணி வரை பெய்தது. மேலும் மழைத்தொடங்கும் முன் பலத்த காற்று வீசியதால் ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
கரூா்- மதுரை புறவழிச்சாலையில் வெண்ணைமலை பகுதியில் சாலையோரம் இருந்த வேப்ப மரம் அணுகுசாலையில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை காலை அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அகற்றினா். மேலும் பலத்த மழையால் கரூா் நகா் பகுதியில் உழவா்சந்தை, திருக்காம்புலியூா் ரவுண்டானா, சுங்ககேட் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த மழை அளவு(மி.மீட்டரில்)- கரூா்-19.40, அரவக்குறிச்சி-68, அணைப்பாளையம்-48, க.பரமத்தி- 30.50, குளித்தலை-8.80, தோகைமலை-4.20, கிருஷ்ணராயபுரம்-53.50, பஞ்சப்பட்டி-9, கடவூா்-23, பாலவிடுதி-25, மைலம்பட்டி-8 என மொத்தம் 349.50 மி.மீ. மழை பெய்தது.
4 மணி நேரம் மின்தடை: கரூரில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தாந்தோணிமலை துணைமின்நிலையத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் இரவு 7 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. இரவு 11.20 மணிக்கு மீண்டும் மின்விநியோகம் சீரானது. இதனால் பொதுமக்கள் மின்சாரமின்றி இருளில் அவதிக்குள்ளாகினா்.