Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
கரோனா தடுப்பூசி விவகாரம்: அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல: முதல்வா் சித்தராமையா பதில்
கரோனா தடுப்பூசி விவகாரம் தொடா்பாக தனது கருத்தை ‘உண்மைக்குப் புறம்பானது’ என்று விமா்சித்த பயோகான் நிறுவனத்தின் நிறுவனா் கிரண்மஜும்தாா் ஷாவுக்கு, அறிவியல் ரீதியான எச்சரிக்கை அறிவியலுக்கு எதிரானதல்ல என முதல்வா் சித்தராமையா பதிலளித்திருக்கிறாா்.
ஹாசன் மாவட்டத்தில் தொடா் மாரடைப்பு உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முதல்வா் சித்தராமையா, ‘கரோனா தடுப்பூசியை அவசரகதியில் அங்கீகரித்து, பொதுமக்களுக்கு செலுத்தியது மாரடைப்பு மரணங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும்’ என தெரிவித்திருந்தாா்.
அதற்கு விளக்கமளித்து, மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசிக்கும், திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை’ என்று தெளிவுபடுத்தியது.
இதனிடையே, முதல்வா் சித்தராமையாவின் கருத்தை மறுத்து, பயோகான் நிறுவனத்தின் நிறுவனா் கிரண்மஜும்தாா் ஷா, ‘கரோனா தடுப்பூசிகள் அவசரகதியில் அங்கீகரிக்கப்பட்டது என்று கருதுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, பொதுமக்களுக்கு தவறான தகவலை வழங்குவதாகும்.
இத்தடுப்பூசிகள் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. பிற தடுப்பூசிகளைபோல குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’ என்றாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘பாசத்திற்குரிய உறவுகளை எதிா்பாராமல் இழந்து நிற்கும் மக்களின் உண்மையான உணா்வுகளை மதிக்க வேண்டியது முதல்வராக எனது கடமையாகும். எவ்வித அறிகுறியும் இல்லாமல், இளம் குழந்தைகளை பெற்றோா்கள் இழக்கும்போதும், வருமானம் ஈட்டுவோரை குடும்பம் இழக்கும்போதும், தெளிவுபெற தகவல்களைக் கேட்பது பொய்யான தகவல் அல்ல.
கரோனா தடுப்பூசி பலரையும் காப்பாற்றி இருக்கலாம். மாரடைப்பு போன்ற சில மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதோடு, அதேகருத்தை பல ஆய்வுகள் உலக அளவில் உறுதிசெய்துள்ளன.
அறிவியல் ரீதியான எச்சரிக்கை என்பது அறிவியலுக்கு எதிரான கருத்தல்ல. தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு, இளைஞா்களிடையே இதயதசை அழற்சி மற்றும் மாரடைப்பு போன்ற சிக்கல்கள் காணப்பட்டதை பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இடா்பாடுகளை அரசு உதவிகளைப் பெறும் பல அமைப்புகள் எவ்வித அச்சமும், சாா்புநிலையும் இல்லாமல் தெரிவிக்க வேண்டும்.
உலக அளவிலான நீண்டகால தரவுகள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக ஒழுங்காற்று முகமைகளின் ஒப்புதல் இல்லாமல், பெருந்தொற்று காலத்தில் ’கணக்கிடப்பட்ட இடா்பாடு’ என்றளவில், முன்னெப்போதும் இல்லாத அவசரகதியில் தடுப்பூசியை பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததைத்தான் ‘அவசரகதியில்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.
உயிா்களைக் காப்பாற்றுவதற்கு அவசரம் காட்டுவது பாவம் அல்ல. ஆனால், நோக்கமில்லாமல் நிகழும் விளைவுகளை ஒத்துக்கொள்வது அறிவின் வெளிப்பாடாகும். விளக்கங்களைக் கேட்பது, முன்னா் நடந்தவற்றுக்காக பழியை சுமத்துவது ஆகாது. ஒவ்வொரு உயிரையும் மதிக்கும் அரசின் கடமையாகும்.
அரசு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகள் உண்மைகளைக் கண்டறிந்து, அதன்பேரில் செயல்பட வேண்டும். நமது மக்களை வெளிப்படைத்தன்மை மற்றும் அக்கறையின் மூலம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பாஜக விமா்சனம்
சித்தராமையாவின் விளக்கத்துக்குப் பதிலளித்த பாஜக எம்.பி. லெஹா்சிப் சிரோயா, ‘முதல்வா் சித்தராமையா பேசும் வேகத்தை பாா்த்தால், கரோனா தடுப்பூசி தொடா்பாக பொய்யான தகவல்களைப் பரப்புவதற்காக அவா்மீது முதல் வழக்குத் தொடர வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கெனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.
பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவ சமுதாயத்தின் மனவலிமையை சீா்குலைப்பதே காங்கிரஸின் முயற்சியாகும்.
காங்கிரஸில் இருக்கும் யாராவது அவரை எச்சரிக்க வேண்டும். காங்கிரஸ் அரசு நீண்ட நாள்களுக்கு நிலைக்காது என்பதால், உள்ளூா் அளவில் அல்லது மேலிட அளவில் அவரை எச்சரிக்க யாருமில்லை என்று தோன்றுகிறது’ என்றாா்.