கறைபடிந்த அமைச்சரவை: அண்ணாமலை குற்றச்சாட்டு
கறைபடிந்த அமைச்சரவையை மக்கள் விரைவில் தோற்கடிப்பார்கள் எனப் பதிவிட்டு ’கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கிவைத்தார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் தமிழகத்துக்கான கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக தலைவர்களும், மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றால் ’கோ பேக் மோடி’ என்பதற்கு பதிலாக ’கெட் அவுட் மோடி’ எனத் துரத்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, திமுக ஊடக அணியினர் ’கெட் அவுட் மோடி’ என்று இந்திய அளவில் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற டிரெண்டிங்கை தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவித்தார்.
இதையும் படிக்க : மொழிப் பிரச்னையில் தலைவா்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவோம்: அண்ணாமலை
இந்த நிலையில், காலை 6 மணிக்கு ‘கெட் அவுட் ஸ்டாலின்’ டிரெண்டிங்கை தொடங்கிவைத்த அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:
“ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என அனைத்துக்கும் தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு விரைவில் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை டிரெண்டிங்கை தொடங்கிவைத்து 3 மணிநேரமாகும் நிலையில், இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பதிவிடப்பட்டுள்ளது.