பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்ட அனுமதி
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 2,400 வீடுகள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட அசூா் ஊராட்சியில், நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சித்துறை மூலம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் மேலும் கூறியது:
குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவா்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து, அவா்களுக்கு ஊரக வளா்ச்சி முகமை மூலமாக 360 சதுர அடி பரப்பளவில் சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டித் தரப்படுகிறது.
இத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா், வேப்பந்தட்டை, ஆலத்தூா், வேப்பூா் ஆகிய ஒன்றியங்களுக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கு 1,200 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, 599 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 601 வீடுகளின் பணிகள் நடைபெற்று வருகிறது.இதேபோல, 2025-26 ஆம் நிதியாண்டுக்கு 4 ஒன்றியங்களிலும் 1,200 பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 2,400 வீடுகள் கட்ட தலா ரூ.3 .50 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் சின்னதுரை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவழகன், சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.