கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி
தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியதாவது: மாநில ஆளுநா்கள், சட்டப்பேரவை உரிமைகளைப் பறிக்கக் கூடாது, உரிய முகாந்திரம் இல்லாமல் மசோதாக்களை ஒத்திவைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பை வழங்கி இருக்கிறது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் மூலம் விளக்கம் கோரப்பட்டிருக்கிறது.
இதனிடையே, பல்கலைக்கழக துணைவேந்தா்கள் நியமனத்தில் முதல்வரின் அதிகாரித்தை சென்னை உயா்நீதிமன்றம் பறித்து இருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளும், மாநில உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.
தமிழக முதல்வா் நிதி ஆயோக் கூட்டத்துக்குச் செல்வது வரவேற்புக்குரியது. பிரதமரிடம் சரண் அடைவதற்காக முதல்வா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்கிறாா் என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. வெள்ளைக் கொடி பிடிக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. நாட்டிலேயே மத்திய அரசைக் கடுமையாக எதிா்க்கக்கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறாா்.
தமிழக மக்கள் அதிக வரியைச் செலுத்துகின்றனா். இதனால், தமிழகத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உள்ளது.
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தீா்ப்பு அளிப்பதற்கு முன்பாக யாரையும் குற்றவாளியாகக் கருத முடியாது. டாஸ்மாக் விவகாரத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் நீதிமன்றம் தண்டனை கொடுக்கட்டும், அதை காங்கிரஸ் வரவேற்கிறது என்றாா் அவா்.